Friday 21 October 2011

''திருக்குறள்'' மிக எளிய உரை

Posted On 04:46 by Admin | 0 comments



கடவுள் வாழ்த்து (குறள் 1-10)

அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
                                  பகவன் முதற்றே உலகு.                             

பொருள்:-எந்த மொழிக்கும் முதல் எழுத்து 'அ'.அதுபோல உலகம் கடவுளையே முதன்மையாக கொண்டுள்ளது.


கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன்
             நற்றாள் தொழாஅர் எனின்.                
                 
பொருள்:-கல்வியின் நோக்கமும் பயனும் கடவுளை உணர்ந்து வணங்குவதே.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்.

பொருள்:-மனத்தாமரையில் கோயில் கொண்டுள்ள கடவுளை வணங்கினால் உலகில் நீடித்த புகழுடன் நீண்ட காலம் வாழலாம்.


வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல.

பொருள்:-விருப்பு, வெறுப்பற்ற கடவுள் திருவடிகளை வணங்கி வாழ்பவர்க்கு எப்போதும் துயரம் இல்லை.


இருள்சேர் இருவினையும் சேரா; இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொருள்:-கடவுளுடைய புகழை மட்டும் போற்றி வணங்கி வழிபட்டால் நம்முடைய நல்வினை,தீவினையாகிய இரண்டின் விளைவுகளிலிருந்தும் தப்பலாம்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

Monday 10 October 2011

''யோகிஸ் அறக்கட்டளை'' நோக்கம்

Posted On 09:24 by Admin | 0 comments



           
                       உலகிற்கு தொடர்ந்து ஞானத்தை வழங்கி ஒளிவீசக் கூடியது நம் பாரதம்.பல்வேறு மகான்கள் தோன்றி,மக்களிடையே ஆன்மீகத்தை பரப்பி வருகின்றனர்.இந்திய மக்களில் பலரும் ஆன்மீகத்தை சார்ந்தும் இருக்கின்றனர்.தற்போது சந்தையில் 'ஆன்மிக' வியாபாரம் நன்றாக விற்றுக் கொண்டிருக்கிறது.பழம் ஞானிகள் வகுத்தளித்த பயிற்சி முறைகளையும்,ஞானக் களஞ்சியத்தையும் தற்போது உள்ள பயிற்சிக் கூடங்கள் விற்று பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறது.ஒழுக்க பழக்கங்களில் சிறந்து விளங்கிய பிறகு கற்று தந்த யோக நுணுக்கங்கள்,தற்போது யார் பணம் கட்டினாலும் கிடைத்து விடுகிறது.இது பலனற்ற விதையாகவே போய் விடுகிறது.இதை தவிர்த்து பலமையான ஞானக் கருத்துகளை இன்றைய தலைமுறையினருக்கு எவ்வித கட்டணமும் இன்றி,தகுதிக்கேற்ப வழங்குவதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பு தான் ''யோகிஸ் அறக்கட்டளை''. 

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

"யோகிஸ் அறக்கட்டளை"- பணிகள்

Posted On 09:23 by Admin | 0 comments



"யோகிஸ் அறக்கட்டளை"- பணிகள் 

  • ஆர்வமுள்ள அனைவருக்கும் இலவசமாக 'தியானப் பயிற்சி' வழங்குதல்.
  • ஆன்மீகமே வாழ்வாக எண்ணி,துறவு பூண்டோர்க்கு உணவு,உடை,உறையுள்,பயிற்சி அளித்தல்.
  • எந்த ஒரு நபரும் ஏமாறாமல் இருக்க ஆன்மீக விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துதல்.
  • ஆன்மீக அதி நுட்பமான பயிற்சி முறைகளை சரியான நபருக்கு வழங்குதல்.
  • அறிவியல் பூர்வமாக ஆன்மீக அனுகுமுறையை அமைத்தல்.
  • பழம் ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றினை ஆய்வு செய்தல்.
  • சித்தர் பாடல்களில் உள்ள மறைபொருள் கோட்பாட்டினை ஆய்தல்.
  • சுதந்திரமான,ஆன்மீகமான தியான பயிற்சி கூடம் உருவாக்குதல்.
  • எளிய கட்டுப்பாடு,எளிய அணுகுமுறையுடன் ஆன்மீக அன்பர்களை உருவாக்குதல்,பிரமாண்டம் காட்டுதலை தவிர்த்து எளிமையை கற்றுதருதல்.
  • இல்லறமும் நல்லறமும் செய்ய ஏற்றது என்பதை பரப்புதல்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

"யோகிஸ் அறக்கட்டளை"- தொடர்புக்கு

Posted On 09:22 by Admin | 0 comments



"யோகிஸ் அறக்கட்டளை"- தொடர்புக்கு 

யோகிஸ் அறக்கட்டளை 
29/18,தங்கம்மன் கோவில் தெரு 
விக்கிரமசிங்கபுரம்.
திருநெல்வேலி மாவட்டம் -627425
அலைபேசி:-9244293265,9944487366


குறிப்பு:-

     தங்கள் குழுவினரோ,தங்கள் குடும்பமோ,தங்கள் நிறுவன உறுப்பினர்களோ 'தியானம்'பயில வேண்டி விரும்பினால்,நாங்கள் நேரில் வந்து கற்றுத் தருகிறோம்.(போக்குவரத்து செலவு மட்டும் தங்களது பொறுப்பு)

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

தமிழர் வாழ தமிழ் போதுமா..?

Posted On 00:23 by Admin | 0 comments





தமிழுக்கு மிகுந்த சோதனைகள் வாய்த்துள்ளதாகத் திரும்பத் திரும்பக் குரல் எழுப்பப்பட்டு வருகிற ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தமிழுக்கு அப்படி என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று பார்ப்போம். ஒரு வகையில் பார்த்தால் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் பல ஏற்றங்களைக் கண்டிருக்கிறது. உலகெங்கிலும் சுமார் எட்டு கோடித் தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழ் பேசத் தெரிந்தவர்கள். பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் தங்கி அந்நாட்டு மொழியையும் வேறு மொழிகளையும் கற்றுக் கொண்டுவிட்டு, தமிழைப் பயன்படுத்தவே முடியாத சூழலில் தமிழ் பேசாத தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டாது என்று கொள்ளலாம். இப்படியொரு அதிக அளவில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் தமிழினம் தொடங்கிய காலம் முதல் இப்போதுதான் இருக்கிறார்கள். உலக மக்கள் தொகை பெருக்கத்தின் நேரடி விளைவாகவும் இதனைப் பார்த்தால் இதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கொள்ளமுடியாது. ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் இப்பொழுது உள்ள அளவிற்கு இதுநாள்வரை இருந்ததில்லை என்பதை ஒரு பலமாகவும் பார்க்கலாம். தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள் எண்ணற்ற அளவில் ஆண்டுதோறும் பிரசுரமாகின்றன. தமிழ்புத்தகங்களின் மொத்த ஆண்டு விற்பனைத் தொகை ரூ.80 கோடியைத் தாண்டிவிட்டது. எட்டு கோடி தமிழர்களின் புத்தகச் செலவு இதுதான் என்று பார்க்கும் பொழுது இந்த தொகை அவ்வளவு பொருட்படுத்தத்தக்கதாக இல்லை என்று கூறலாம். ஆனால் இவர்களில் ஆறரை கோடித் தமிழகத் தமிழர்கள்தான் புத்தகங்களை அதிகம் வாங்கியவர்கள். அது சுலபமான யூகம்தான். தமிழகத் தமிழர்களிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருபது சதவிகிதத்தினருக்கு மேற்பட்டவர்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பலரும் புத்தகம் வாங்கும் பழக்கத்தை இன்னமும் கைக் கொள்ளாதவர்கள் என்றெல்லாம் பார்க்கும் பொழுது புத்தக விற்பனையின் ஏறுமுகம் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. நூலகங்கள் தவிர ஒரு சிறுபான்மையினரே புத்தகங்கள் வாங்குகின்றனர் என்றாலும் தமிழ்ப் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருவதைக் கண் கூடாகப் பார்க்கலாம். தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கணினியிலும் தமிழ் காலந்தாழ்த்தாது நுழைந்து விட்டது.

ஆனால் தமிழைக் கல்வி நிலையங்களில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்கள் விருப்புடன் தமிழைக் கற்பதில்லை. மேடைகளில், தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் தமிழ் சொற்களைச் சரியாக உச்சரிப்பதில்லை. ஆங்கிலத்தை விரும்பி உபயோகிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடவே விரும்புகிறார்கள். தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாகவில்லை. தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் போதிக்கப்படுவதில்லை. அவ்வாறே போதிக்கப்படும் இடங்களிலும் மேல்நிலை வகுப்புகளில் தமிழ் இடம்பெறுவதில்லை. அங்கெல்லாம் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைகள் அப்பா அம்மா என்றெல்லாம் அழைக்காமல் டாடி, மம்மி என்று அழைக்கின்றனர். சுருங்கக் கூறினால் தமிழின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக ஆங்கிலம் கருதப்படுகிறது.

தனித்தமிழை வேண்டியவர்கள் வடமொழி மீதுதான் வெறுப்பு கொண்டிருந்தனர். ஆங்கிலத்தின் மீது அல்ல. இப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே வடமொழி தமிழுக்கு ஊறு விளைவிக்கும் மொழியாகக் கருதப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் கலக்கக்கூடாது என்பது பலரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டதாகவே கொள்ளலாம். மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து போய்விட்டது. வட மொழிச் சொற்களுக்கு மாற்றான தமிழ்ச் சொற்களைப் பலரும் விருப்புடன் எடுத்தாளத் துவங்கிவிட்டனர். வட மொழியினால் தமிழுக்கு அபாயம் எதுவும் இல்லை. ஏனெனில் தமிழும் வடமொழியும் தனித்தனியேயான உள்ளார்ந்த குணங்கள் கொண்டவை. வடமொழியில் இதிகாசங்களும் வேதங்களும் வளர்ந்தன. தமிழில் இலக்கியங்களும் நீதி நூல்களும் படைக்கப்பட்டன. பக்தி இலக்கியங்கள் தோன்றும்வரை இந்த நடைமுறை இருந்திருக்கிறது. வட மொழி வழக்கொழிந்து போனதற்கும் தமிழ் இன்றளவும் மக்கள் மொழியாக இருப்பதற்கும் இவையும் கூட காரணங்கள் எனலாம்.

ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வைத்துள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்துக் கடவுள்களின் மற்றும் மகான்களின் பெயர்களைத் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் வைப்பதால் அவை தமிழ்ச் சொற்களாக இருப்பதில்லை. பெரும்பாலும் அவை வடமொழி சார்ந்தவை. ஆனால் அப்பெயர்களை வைப்பவர்கள் சமய இறையுணர்வு காரணமாகச் செயல்படுகிறார்களேயன்றி அவர்கள் தமிழ் உணர்வற்றவர்கள் என்று கொள்வது தவறான கற்பிதம். தமிழர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் போன்றோரும் தங்கள் இறைவழிபாட்டு பண்பினையொட்டி சமயப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். அப் பெயர்களும் அந்நிய மொழியிலிருந்து பெறப்பட்டவை. அவற்றுக்கும் மூலம் தமிழ் கிடையாது. கார்ல் மார்க்ஸ், சாக்ரடீஸ், இங்கர்சால் போன்ற அறிஞர்களின் பெயர்களை விரும்பி வைத்துக் கொள்பவர்களும் உள்ளனர். அப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. எனவே இந்துக்கள் மட்டும் தங்கள் இறை நம்பிக்கை அடிப்படையில் அமைந்த பெயர்களை அவை வடமொழி மூலம் கொண்டிருக்கின்றன என்கிற காரணத்தால் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவது எவ்வகையிலும் நியாயமானதல்ல.

அது போன்றே ஷ,ஜ,ஸ ஆகிய எழுத்துகள் வந்தால் அவற்றுக்குப் பதிலாக ச என்ற எழுத்தையும் ஹ வந்தால் அதற்குப் பதிலாக அ என்ற எழுத்தையும் போட்டு எழுதுகிற பழக்கம் தமிழ்ப் பற்றை நிரூபிப்பதாகக் கொள்வது. வடமொழியில் மட்டும் இன்றி இந்த எழுத்துகள் பாரசீகம், அரபு, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் காணப்படுகின்றன. எனவே பிறமொழிச் சொற்கள் கொண்டுள்ள ஒலியினை வரி வடிவத்தில் தமிழில் தர வேண்டும் என்றால் இந்த எழுத்துகளைக் கட்டாயமாக நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதை மொழி பெயர்ப்பு இலக்கியம் அசட்டை செய்ய இயலாது. ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று எழுதுவதால் என்ன பயன்? இவரல்ல அவர் என்கிற முடிவிற்கு வருவதைத் தவிர? ஒருவரது பெயரையே ஒப்புக்கொள்ளாதவர்கள் அவருடைய படைப்புக்கு எத்தகைய நியாயத்தை வழங்கி விட முடியும்? நம் மொழிக்குப் பிறர் இத்தகைய சிதைவுகளைச் செய்தால் நாம் மனம் ஒப்புவோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் ஊர் பெயர்களைச் சிதைத்ததை நாம் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். தனித்துவம் மிக்க ழ என்கிற தமிழ் எழுத்து ஆங்கிலத்தில் LA என்று எழுதப்படுவதைவிட zha என்று அதன் உச்சரிப்பு கெடாமல் வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதே ஆற்றலை நாம் மற்ற மொழிகளுக்கும் தர வேண்டுமல்லவா? வடமொழி உள்ளிட்டு எந்த மொழி மீதும் வெறுப்பினை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மொழிகள் பரஸ்பரம் கொள்கிற பாதிப்புகள் நாகரிகத்தின் அடையாளம். "பிற மொழிகள் மீது பகைமை கொள்ளாதே பாப்பா" என்கிற வரியையும் பாப்பா பாட்டில் சேர்த்துப் படிக்க வேண்டும்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அதன் மீதான எதிர்கொளல் சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தை விரும்பிக் கற்பவர்களாயும் அதைப் பயன்படுத்துபவர்களாயும் உள்ள தமிழர்களை ஆங்கில மோகிகள் என்று வர்ணிப்பது பிழை. மோகம் என்பது பயனற்ற அர்த்தமற்ற விளைவுக்கு இட்டுச் செல்கிற மனோபாவத்தைக் குறிக்கும். தேர்ச்சி பெறுவதென்பது காலத்தின் இன்றியமையாமை ஆகும். ஆங்கிலத்தில் இரண்டு தமிழர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறு என்று பேசப்பட்டு வருகிற காலம் இது. ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழ் மெல்லச் சாகும் என்று சொல்லுமளவுக்குத் தமிழ் பலவீனமான மொழி அல்ல. தமிழர்களும் தமிழைத் தவிக்க விடுவதற்காக ஆங்கிலம் பேசுவதில்லை. தேவை கருதியும் தன்னம்பிக்கையின் அடையாளமுமாயும்தான் அவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அது இயலாத ஒன்று என்பதையும் கூட கவனிக்க வேண்டும். இன்று தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஆங்கிலக் கல்வி. தமிழர்களின் வாழ்வில் வளம் சேர்ப்பது ஆங்கிலம்தான். தமிழர்களாகிய நாம் நம்மிடையே உள்ள பிற வளங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். நம்மிடம் இயற்கை வளங்கள் குறைவு. வற்றாத நதிகள் என்று எதுவும் இல்லை. குடிநீருக்கே பிற மாநிலங்களை யாசிக்க வேண்டிய நிலை. ஏற்றுமதி செய்யத்தக்க கனிமப் பொருட்களோ நுகர் பொருட்களோ கணிசமான அளவில் இங்கு கிடையாது. 

நாடு என்ப நாடாவளத்தன நாடல்ல / நாட வளம் தரும்நாடு என்றார் வள்ளுவர். நமக்கே இயற்கையாக வாய்க்கப்பெற்ற வளம்தான் நம்முடையது என்னும் பட்சத்தில் நம்மிடம் இருப்பதெல்லாம் மனித வளம்தான். நாம் மற்றவரிடமிருந்து எதையாவது பெறவேண்டுமென்றால் நாம் எதையாவது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா? நம்மால் கொடுக்க முடிவது மனித வளத்தைத்தான். காலம் காலமாகத் தமிழர்களாகிய நாம் நம் உழைப்பைத்தான் மற்றவர்களுக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். பிஜி, ஆப்ரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குக் கூலி வேலை செய்பவர்களைத் தருபவர்களாக தமிழகம் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அந்த அவல நிலை மாறி பிற நாடுகளுக்கு நாம் அறிவு சார்ந்த துறைகளில் வேலை செய்வதற்காக தமிழர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் ஆங்கில அறிவுதான். ஆங்கிலத்தில் நம்மவர்கள் பேசவும் எழுதவும் பெற்ற தேர்ச்சியின் விளைவே இது.

இந்தத் தேர்ச்சியை நாம் எவ்வாறு பெற்றோம்? 

பல வருடங்களாக ஆங்கிலம் கற்றுப் பேசி எழுதிப் பெற்ற தேர்ச்சி இது. எனவே ஆங்கிலத்தில் பேச தேர்ச்சி பெற வேண்டுமென்றால் தமிழர்கள் பிற தமிழர்களிடம்தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டுமென்றால் இந்தத் தேர்ச்சி வந்திருக்காது. சிறு வயது முதல் ஆங்கிலம் படித்தாலும் ஆங்கிலமே பேசியிராதவர்கள் இருபது வயதுக்கு மேல் வேலை நிமித்தமாக திடீரென சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியுமா? மொழிப் பயிற்சி சிறு வயதிலிருந்தே வருவது நல்லது.

நான் மம்மி என்று கூப்பிடுகிறேன். அதனால் நீ கவுன் அணிந்து முள் கரண்டியால் எனக்கு ரொட்டியை ஊட்டு என்றெல்லாமா அக்குழந்தை தன் தாயிடம் கேட்கிறது? தமிழ் உணர்வுடன் பண்பாட்டுடன்தான் அக்குழந்தை பேசுகிறது. மம்மி என்பது அக்குழந்தையின் ஆங்கில மழலை. நீ எனக்கு அம்மா என்ற சொல்லைக் கற்றுக் கொடுத்தாய், நான் மம்மி என்ற சொல்லைக் கற்று வந்திருக்கிறேன் பார் என்று அது பெருமிதத்துடன் சொல்வதைத் தமிழுக்கு எதிரான செயலாகப் படம் பிடித்துக் காட்டுவதும் ஆங்கிலத்தை விட்டுத் தமிழில் பேசுகிற குழந்தைகளுக்கு அபராதம் போடுகிற ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி ஆசிரியர்களின் கொடூரமும் மொழி பற்றிய புரிதலின்மை என்கிற ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். மம்மி, டாடி என்பதெல்லாம் சரி, நீ அம்மா அப்பா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அன்பாகக் கூறினால் அக்குழந்தை ஒரே நொடியில் தன்னை மாற்றிக் கொள்ளும். 

ஆங்கிலம் தமிழ்ச் சமூகம் வளர்ந்துள்ளது. ஆங்கிலம் போன்ற ஒரு மொழியின் வளத்தையும் உபயோகத்தையும் அம்மொழி தரும் வாய்ப்புகளையும் தமிழ் தரவேண்டுமென விரும்பும் நாம் ஆங்கிலத்தை ஒதுக்கி வைப்பது கூடாது. இந்தியாவின் எதிர்காலத்தை தொலைநோக்குடன் பார்த்த காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றோர் நம்மை அடிமைப்படுத்தியவன் ஆங்கிலேயன் என்ற ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்ளுமாறு போதிக்கவில்லை. தலித் மக்களுக்கு ஆங்கிலக் கல்வி அவர்களது பின்தங்கிய நிலைகளிலிருந்து விடுதலையை அளிக்கும் என்று நம்பினார் அம்பேத்கர்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பாரதிக்கு மட்டும் ஏனோ அச்சிறப்பு மிக்க கண்ணோட்டம் வாய்க்கவில்லை. ஆங்கிலக் கல்வியையும் ஏன், தன்னிடம் ஆங்கிலம் பேச வந்த தமிழர்களையும் சினந்தார் பாரதி. ஆங்கிலத் தேர்ச்சி மற்றும் பெற்றிராவிடில் பாரதி நவயுகத்தின் மகாகவியாக ஆகியிருக்க முடியாது என்பது நிச்சயம். ஷெல்லி, வால்ட் விட்மன் ஆகியோரின் நேரிடையான பாதிப்புகளுக்கு மட்டுமின்றி அவரது கவிதைகளில் இடம்பெற்ற முன்னோடியான சிந்தனைகளுக்கும் அவரது ஆங்கில அறிவே காரணம். கவிஞராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆங்கில அறிவினால் அடைந்த பயன்களும் ஏராளம். ஆனால் பாரதி உட்பட அனைத்துத் தமிழர்களும் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் மெய்யாக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்வதில்லை. தலைவன் முதல் தொண்டன்வரை ஆங்கிலத்திற்கு எதிராகப் பொது வெளிகளில் பேசுகிற அனைவரும் ஆங்கிலம் மீது விருப்பு கொண்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நன்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதில் உறுதியானவர்கள். ஒரு பக்கம் வாழ்க்கை வெற்றிக்குத் தேவையான ஆங்கில அறிவை அடையும் முயற்சி. இன்னொரு பக்கம் தமிழ் பின்தங்கிவிடக்கூடாது என்று எண்ணிச் செயல்படுகிற தவிப்பு. இவைதான் தமிழனின் இன்றைய நிலை.

தமிழ் அசாதாரணமானதும் அற்புதமானதுமான ஒரு மொழி என்பதில் சந்தேகம் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக அது எத்தனையோ இடர்களைக் கடந்து இன்றும் இளமையுடன் தோன்றுகிறது. உலக ஓட்டத்துடன் தமிழ் தன்னைச் சளைக்காமல் இணைத்துக் கொள்கிறது. எந்த மொழியில் புதிய சொல்லாக்கங்கள் ஏற்பட்டாலும் அதற்குத் தமிழில் தக்க ஒரு சொல்லை உருவாக்கிவிட முடிகிறது. ஆனால் இதனால் நாம் எதையோ இழக்கிறோமோ என்றும் தோன்றுகிறது. ஆங்கில வழியில் வரும் சொற்கள் தான் தமிழில் மிகுதியாக இவ்வாறு மறு ஆக்கம் செய்யப்படுகின்றன. ஆங்கிலப் பதங்களுக்கு தமிழ்ச் சொற்களை உருவாக்குவது என்றில்லாமல் சுயமாக ஒரு கருத்துக்குத் தமிழில் சொல்லாக்கம் செய்வது என்பது அரிதாக உள்ளது. அவ்வாறு சமீபத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்ட ஒரு சொல் திருநங்கை. நேரிடையாக பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. குதிரை பேரம், பங்குச் சந்தை வார்த்தைகளான கரடி, காளை, தொங்கு பாராளுமன்றம், ஓடு தடம், மென்பொருள், அலை வரிசை, கறுப்பு ஆடு, நீர்வீழ்ச்சி, தொலைக்காட்சி இப்படி ஏராளமான சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை நேரிடையாக இல்லாமல் பொருளை உள்வாங்கி உருவாக்கப்படும் சொற்களும் உள்ளன. நகை, முரண், புகைப்படம், பேருந்து, காசோலை, கணினி, வானொலி போன்ற பல சொற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அவ்வாறு இருவகையிலும் உருவாக்கப்பட்ட சொற்கள் கலைச் சொற்கள் போன்றவை. தமிழ் எழுத்து நடையில் இத்தகைய சொற்கள் நாளும் பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தகைய சொற்களின் வரத்து அதிகமாகி எழுத்து தமிழ் உருவாக்கப்பட்ட சொற்களின் கோவையாக விளங்கக்கூடும். பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் மேலும் இடைவெளி இதனால் அதிகமாகும் என்பதோடு மட்டுமின்றி, இது நாள் வரை தமிழ் மொழி என்பது வாழ்விலிருந்து பெறப்பட்டது என்கிற வழக்கிலிருந்தும் மாறுபட்டதாகி தமிழுக்கு செயற்கைத் தன்மை வந்து சேரும். இது தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்கும்கூட பொருந்தும்.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களாகிய நாம் உலகை ஆள்வதில் பங்கேற்பதில்லை என்பதுதான். பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் முன்னோடி அங்கம் ஏற்பதில்லை என்பதில் மட்டுமல்ல, அறிவு சார்ந்த இயக்கங்களையும் நாம் உருவாக்குவதில்லை. தமிழில் இலக்கியம் தவிர புதிதாக எதுவும் படைக்கப்படுவதில்லை. கண்டுபிடிப்புகள், கருத்தாக்கங்கள் அனைத்தும் நமக்கு மேற்கிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை நம் மொழியில் செவ்வனே பொருத்திக் கொள்கிறோம். அதற்கேற்ப மாற்றுச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம். சுயமாக கண்டுபிடிப்புகளும் கருத்தாக்கங்களும் தமிழர்களால் செய்யப்பட்டு அவை தமிழில் பதிக்கப்படும் வரை இந்த வறுமை நீடிக்கும். அதுவரை கோடிக்கணக்கானவர்களின் அன்றாட மொழியாகத் தொடர்ந்தாலும் தமிழ், மொழி சார்ந்த பெருமையில்தான் திளைக்க வேண்டியிருக்கும். நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானிகளான சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் ஆய்வுகளைத் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தார்களேயானால் இந்த நிலைமை மாறியிருக்கும். இனிவரும் காலங்களில் பல்துறை சார்ந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிற அதே சமயத்தில் சற்றும் காலம் தாழ்த்தாது தமிழிலும் வெளியிட்டால் அது ஒரு முன் மாதிரியான முயற்சியாகத் தமிழை உலகத்திற்கு எடுத்துச் செல்கிற செயலாக இருக்கும். இவ்வாறு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது என்றெல்லாம் எதுவும் தரப்பட வேண்டியதில்லை. இயல்பான தமிழ் உணர்வு எல்லா தமிழர்களிடமும் செயல்பட வேண்டும். 

தமிழை மற்ற மொழிகளுடன் குறிப்பாக, ஆங்கிலத்துடன் போட்டியிடும் மொழியாகப் பாவிப்பதனால் தான் பல பிரச்சினைகள் எழுகின்றன. வேலை வாய்ப்புக்கும் வெளி உலகத் தொடர்புக்கும் தமிழ் உபயோகமாக இருக்குமா என்ற கோணத்தில் தமிழைப் பார்க்கக்கூடாது. அவ்வாறு தமிழ் இல்லாத பட்சத்திலும் தமிழ் நம் மொழி, அதை நன்கு கற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டிற்குள் மட்டும் செயல்படுகிற நீதிமன்றங்கள், அரசு நிர்வாகங்கள் ஆகியன தமிழில் இருக்க வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு தமிழின்பால் தன்னார்வத்தை தூண்டுமாறு இன்றைய தலைமுறையினர் செய்யவேண்டும். தமிழ் படிக்க வரும் மாணவர்களை வேதனைப்படுத்தக்கூடாது. கடினமான தமிழைப் படிப்பதைவிட பிரெஞ்சு, வடமொழி ஆகியவற்றைப் படித்தால் சுலபமாக மார்க் வாங்கிவிடலாம் என்ற யதார்த்தத்தை மாற்றும் வகையில் தமிழ் படிப்பும் சுலபமாக இருக்க வேண்டும். தமிழை வைத்து தமிழ் மாணவர்களையே மிரட்டினால் பின்னர் அதைப் படிக்க வேறுயார் வருவார்கள்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று இருப்பது போல் வெறும் இலக்கிய, இலக்கணப் படிப்பாக மட்டும் தமிழ் இருக்கக் கூடாது.

தமிழ் அதிகாரப்பூர்வ செம்மொழியாகி விட்டபடியால் உலகெங்கிலுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லாது வசதி படைத்த தனியார்களும் செய்ய விரைந்து முன்வரலாம். தமிழைப் பரப்புவது என்பது தமிழைத் தமிழர்களின் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்வதாகும். தமிழைத் தமிழர் மட்டுமே படிப்பது, எழுதுவது என்றில்லாது தமிழைத் தமிழ் அல்லாதோரும் அறிந்து கொள்ளுமாறு செய்யவேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை!. 

அம்சன் குமார்

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

Tuesday 27 September 2011

உயிரே உன் விலை என்ன?

Posted On 10:00 by Admin | 0 comments


             

''அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது''

என்று சொன்னார் அவ்வை மூதாட்டி. இந்த அரிதான மானிடப் பிறவியின் அருமையை நம்மில் பெரும்பாலோர் உணர்வதில்லை.


தற்கொலை


இந்த பிரபஞ்சத்தில், எந்த கோள்களிலும் அமையப்பெறாத பரிணாம வளர்ச்சியின் உச்சமாக,சிரித்து வாழக்கூடிய, உணர்ச்சிகள் நிறைந்த, எதையும் பகுத்தறியக்கூடிய 6-வது அறிவை பெற்ற நாம், நமது இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் தற்கொலைப் போக்கு நாளுக்கு நாள் நாட்டுக்கு நாடு அதிகரித்து வருகிறது. 


இதற்கு என்ன காரணம்?,

முதலில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதது ஒரு காரணம்.இரண்டாவது,சில மதிகெட்டவர்களின் மன நிலை கெடுதல்.மூன்றாவது,மனிதன் தன்னை பாதுகாத்து கொள்ளுதல் போல் அழித்துக் கொள்ளுதலும் இயற்கையான செயல் என்று எண்ணுவது.

காரணங்கள்


                  அச்சம், கவலை, பற்றாகுறை, தாழ்வு மனப்பான்மை, விரோதம், குற்ற உணர்வு,விவாகரத்து, குடும்ப உறவுகளை அழித்தல், விலைவாசி, பொருளாதார நெருக்கடி, போதைப் பழக்கம், பால் உறவின் தவறான வழி, இளங்குற்றவாளி,பித்துப்பிடித்தல்,நோய், இவை அனைத்தும் பல நேரத்தில் தற்கொலையில் முடிகிறது.வயிற்று வலி, வறுமை, தேர்வில் தோல்வி, ஆசிரியர் திட்டுதல், பெற்றோர் திட்டுதல், அவமானம், ஈவ்டீசிங், அடக்குமுறை, கடன் தொல்லை,வியாபாரத்தில் தோல்வி, காதல் தோல்வி, கள்ளக் காதல், மணமுறிவு,திருமண ஏக்கம், குழந்தை இல்லாத ஏக்கம், குடும்ப பிரச்சனை, வரதட்சணை கொடுமை, இப்படி பல்வேறு காரணங்களாலும், தற்கொலைகள் நடக்கின்றன.

ஈவ்டீசிங்


நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் பெண்கள்,மாணவிகள் ஈவ்டீசிங் கொடுமைக்கு ஆளாகின்றனர்.அவர்களில் 5 சதவீதம் பேர் வெளியில் சொல்ல முடியாத துயரங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கள்ளக் காதல்


கள்ளக் காதலால் வாழ்கையை முடித்துக் கொள்வோரும் பெருகி வருகிறார்கள்.அவர்கள் மன நல நிபுணரிடம் தக்க ஆலோசனை பெற்றால் தற்கொலைகளை தடுக்கலாம்.

''தற்க்காத்து தற்கொண்டாற் பேணி'' என்ற குறள் வரிக்கேற்ப ஆணும்,
பெண்ணும் கற்பு நெறியோடு வாழ வேண்டும்.


நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.
சாகப் பிறந்தவர்கள் அல்ல.

தவிர்க்கும் வழிவகைகள்


பொதுவாக தற்கொலை எண்ணம் ஏற்படும் ஒருவரை நன்கு கவனிக்க வேண்டும்.அவர்களுக்கு சிறந்த நட்பை ஏற்படுத்த வேண்டும்.எந்த பிரச்சனைக்கும் பேச்சிவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்.அடிக்கடி மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனை வழங்கினால் சமூகத்தையே காப்பாற்ற முடியும்.


தியானம்,மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுதல்,தன்னம்பிக்கையை வளர்த்தல்,பிரச்சனைகளை கையாளும் திறன்,சமூகத்தின் போக்கு பற்றிய அறிவு,மனதிற்கு ஓய்வு கொடுத்தல்,ஆகியவற்றின் மூலமும் தற்கொலைகளை தடுக்கலாம்.


''என் கடன் பணி செய்து கிடப்பதே;


என்று வீட்டுக்காகவும்,நாட்டுக்காகவும் தன்னை அற்பணித்தவர்களின் வாழ்கையை உதாரணமாக எடுத்துக் கொண்டு வலிமை பெற வேண்டும்.அந்த வலிமை வாழ்க்கையை வளமாக்கும்.

உயிரே உன் விலை என்ன? என்பதை சிந்திப்போமாக!


தகவல்
சி.குணசேகரன்,
ஆசிரியர்,
அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளி,
உடையார் பாளையம்,
அரியலூர்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

நம் நட்பு

Posted On 09:40 by Admin | 0 comments


நம் நட்பு !!!

ஊனை திரியாக்கி
உயிரில் விளக்கேற்றும் - சக்தி
காதலுக்கு மட்டும் அல்ல
நம் நட்புக்கும் உண்டு !

என் அருகில் நீ இருக்கும் போது
மகிழ்ச்சியின் எல்லையில் இருப்பேன்
கடிகார முள் கூட வேகமா சுற்றும்
உன் பிரிவு எனை வாட்டும் போது
சோகத்தின் சகோதரி ஆகுறேன்
கடிகாரம் கூட ஓட மறுக்கும்
விந்தையை நம் நட்பில் காண்கிறேன்!

நான் பேச நினைப்பதை நீ பேசுவதும்
நீ பேச நினைப்பதை
நான் பேசும் வேடிக்கையை - எண்ணி
ரசித்த நாட்கள் எத்தனை?
ஆழியில் கண்டெடுத்த முத்தைப்போல்
என் வாழ்வில் கிடைத்தது
உன் நட்பு ..!

என்னுடன் நீ இருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்
என் வாழ்வில் கிடைத்த வசந்தங்கள்
இந்த வசந்தங்கள் - என்
மரண படுக்கையிலும் வேண்டும் !
வசந்தம் தருவாயா என் நட்பே ...?

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

Videos(Clik Play Button)

Popular Posts

 

உதிரிப்பூக்கள் Copyright © 2011 Designed by Mydeen